நேபாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
संघीय लोकतान्त्रिक गणतन्त्र नेपाल
சங்கீய லோக்தாந்த்ரிக் கணதந்த்ர நேபால்
நேபாள கூட்டாட்சி மக்களாட்சிக் குடியரசு
நேபாளத்தின் கொடி நேபாளத்தின் சின்னம்
கொடி சின்னம்
குறிக்கோள்
(சமஸ்கிருதம்) जननी जन्मभूमिष्च स्वर्गादपि गरीयसी
தாயும் தாய்நாடும் சொர்க்கத்தை விட மேலானவை
நாட்டுப்பண்
ராசுத்திய காண்
Location of நேபாளத்தின்
தலைநகரம் கத்மந்து
27°42′N 85°19′E / 27.700°N 85.317°E / 27.700; 85.317
பெரிய நகரம் காட்மாண்டூ
ஆட்சி மொழி(கள்) நேபாள மொழி
அரசு கூட்டாட்சிக் குடியரசு
 -  குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ்
 -  பிரதமர் மாதவ் குமார் நேபாள்
ஒரு குடையாதல் 1768 டிசம்பர் 21 
பரப்பளவு
 -  மொத்தம் 147181 கிமீ² (94வது)
56827 சது. மை 
 -  நீர் (%) 2.8
மக்கள்தொகை
 -  யூலை 2005 மதிப்பீடு 27,133,000 (42வது)
 -  2002 குடிமதிப்பு 23,151,423 
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $42.17 பில்லியன் (81வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $1,675 (152வது)
ம.வ.சு (2003) 0.526 (மத்திம) (136வது)
நாணயம் நேபாள உரூபா (NPR)
நேர வலயம் நேபாள நேரம் (ஒ.ச.நே.+5:45)
 -  கோடை (ப.சே.நே.) பயன்பாட்டிலில்லை (ஒ.ச.நே.+5:45)
இணைய குறி .np
தொலைபேசி +977

நேபாளம் ([nəˈpɑːl]?·i) இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தனி நாடாகும். தெற்காசியாவில் உள்ள இந்நாட்டின் வடக்கில் மக்கள் சீன குடியரசும் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்குத் திசைகளில் இந்தியாவும் அமைந்துள்ளன. நேபாளம் பொதுவாக இமாலய இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது.

மேலோட்டம்[தொகு]

நாட்டின் மக்கள் தொகையின் 80% இந்து மதத்தை பின்பற்றுபவர்களாவார்கள். தெற்கே வெப்பமான தெராய்யும் வடக்கே குளிரான இமாலயம் கொண்ட நேபாளத்தின் புவியமைப்பு பெரிய வேறுபாடுகளை காட்டுகிறது. சிறிய தூரத்துக்குள் சமவெளியில் இருந்து உலகிலேயே மிக உயரமான இமயம் வரை நிலம் மிக விரைவாக உயர்வடைகிறது. சினாவுடனான எல்லையில் உள்ள எவரெஸ்ட் உட்பட, உலகில் முதல் பத்து உயரமான மலைகளில் எட்டு நேபளத்தில் காணப்படுகிறது. நேபாளத்தின் தலைநகரமும் அதன் பெரிய நகரமுமாக காட்மாண்டூ விளங்குகிறது. நேபாளத்தின் பெயரின் ஆரம்பம் குறித்த தெளிவான கருத்துக்கள் இல்லாத போதும் "நே" (புனித) "பாள்" (குகை) என்பது பொதுவான கருத்தாகும்.

பல்வேறு அரசர்களின் கீழ், நீண்ட பசுமையான வரலாற்றை கொண்டிருந்த நேபாளம் 1990இல் அரசியலமைப்பு சட்ட முடியாட்சியாக மாறியது. எவ்வாறெனினும் மன்னர் முக்கியமான மற்றும் நன்கு வரையறுக்கப்படாத அதிகாரங்களை தம் வசம் வைத்துக் கொண்டார். இது ஆட்சி நிலையின்மைக்கும் மேலும் 1996 முதல் மாவோயிசவாதிகளால் போரட்டம் ஒன்றை ஆரம்பிக்கவும் வித்திட்டது. முதல் நிலை அரசியல் கட்சிகளால் தனிமைப்படுத்தப்பட்ட மாவோயிசவாதிகள் தலைமறைவாகி அரசுக்கெதிராகவும் அரசருக்கு எதிராகவும் கரில்லா யுத்தம் ஒன்றை ஆரம்பித்தார்கள். இவர்கள் அரசரையும் அரசையும் கவிழ்த்துவிட்டு குடியரசு ஒன்றை உருவாக்கும் நோக்கத்தை கொண்டுள்ளார்கள். இதன் காரணமாக ஏற்பட்டுள்ள நேபாள உள்நாட்டு யுத்தத்தினால் இது வரை சுமார் 13,000 பேர் வரையில் இறந்திருப்பதாக கருதப்படுகிறது. நாட்டின் 60%த்தை ஆட்சி செய்யும் மாவோயிசவாதிகளை அடக்குவதாக கூறி 2002இல் மன்னர் தேர்தல் மூலம் தெரிவான பிரதமரை பதவிநீக்கி அவர் அவரது அரசையும் கலைத்தார். 2005 இல் தன்னிச்சையாக அவசரகால சட்டத்தை பிறப்பித்தார். அரசருக்கெதிராக தொடர்ந்து நடைப்பெற்ற பேரணிகள் எதிர்பார்பாட்டங்கள் காரணமாக மன்னர் 2006 ஏப்ரல் 24ஆம் நாள் முன்பு தன்னால் கலைக்கப் பட்ட பாராளுமன்றத்துக்கு மீண்டும் ஆட்சியை கையளிக்க ஒப்புக் கொண்டார். புதிதாகக் கூடிய பாராளுமன்றம் அரசரின் அதிகாரங்களை அகற்றுவதற்கான சட்டமூலத்தை ஏக மனதாக நிறைவேற்றியது. மேலும் நேபாளம் மதசார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒன்று விரைவில் எழுதப்படவுள்ளது.

வரலாறு[தொகு]

பத்தானிலுள்ள இந்து கோயில்கள்

காட்மாண்டூ பள்ளத்தாக்கு பிரதேசத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட நியோலிதிக் காலப்பகுதியை சேர்ந்த ஆயுதங்களின் மூலம் 9,000 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புகள் இருந்ததை காட்டுகிறது. திபேத்திய-மியான்மார் இன மக்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வசித்ததாக கருதப்படுகிறது.

இந்தோ-ஆரிய மக்கள் சுமார் கிமு 1500 அளவில் இங்கு வந்தனர், மேலும் சுமார் கிமு 1000 அளவில் பல சிற்றரசுகள் தோன்றின. இவ்வாறான ஒரு சிற்றசான சாக்யாவின் இளவரசனான கௌத்தம் சித்தார்த்தன் (கிமு 563-483) என்பவர் தமது அரசை துறந்து மெய்ஞானம் பெற்று பின்னர் புத்தர் என அழைக்கப்பட்டார்.

கிமு 250 அளவில் இப்பிரதேசம் வட இந்தியாவின் மௌரிய பேரரசுடைய ஆதிக்கத்துக்கு உட்பட்டது, பின்னர் கிபி 4ஆவது நூற்றாண்டளவின் குப்த்த பேரரசுடைய ஆட்சியி கீழான அரசாக செயற்பட்டது. கிபி 5வது நூற்றாண்டுக்குப் பின்னர் லிக்காவியர் என அழைக்கப்பட்டவர்கள் இப்பிரதேசத்தை ஆட்சி செய்தனர். இவர்களது ஆட்சி கிபி 5ஆவது நூற்றாண்டின் பிற்காலம் வரை நீடித்தது. லிக்காவி அரவம்சத்துக்கு பின்னர் நேவரி காலம் தொடங்கிற்று 879 தொடக்கம் இவ்வரசவம்சம் நேபாளத்தை ஆண்டது எனினும் அவர்களில் ஆட்சியின் எல்லைகள குறித்த தகவல்கள் இல்லை. கிபி 11வது நூற்றாண்டில், தெற்கு நேபாளம் தென்னிந்தியாவின் சாலுக்கிய பேரரசின் ஆட்சிகுட்பட்டது. இவாட்சியின் கீழ் நேபாளத்தின் மத கட்டமைப்புகள் மாற்றம் பெற்றது அரசர் இந்து மததை ஆதரித்த காரணத்தால் அங்கு ஏற்கனவே நிலவிய பௌத்த மதம் இந்து சமயத்தால் பிரதீயீடு செய்யப்பட்டது.

1920இல் நேபாள அரசவம்சம்

கிபி 12வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெயரின் இறுதியில் "மல்லன்" என்ற பட்டத்தையுடைய மன்னர்கள் ஆட்சி செய்தார்கள். இவர்கள் நாட்டை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து ஆட்சி செய்தார்கள் 200 வருடங்களுக்குப் பிறகு, 14வது நூற்றாண்டில் நாடு, காட்மாண்டூ, பத்தான், பசாட்காவோன் என மூன்றாக பிளவுபட்டது. இவை பல நூற்றாண்டுகளுக்கு பகைமை பாராட்டி வந்தன.

1765 இல் பிரிதிவ் நாராயண் சா மூன்று நாடுகளையும் ஒன்றினைத்து இன்றைய நேபாளத்துக்கு வித்திட்டார். பிரித்தானியர் இந்தியாவை ஆட்சி செய்யும் போது, பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி இந்திய எல்லையில் உள்ள சிறிய அரசுகள்களை தனது இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டது. இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 1815-1816 இல ஆங்கிலோ-நேபாள போர் மூண்டது. இதில் நேபாளியர்கள் நாட்டின் இன்றைய எல்லைகளை சாட்துக் கொண்டனர். ஆனால் சில பகுதிகளை அது பிரித்தானியரிடம் இழந்தது, அவை இன்று இந்தியாவின் ஆட்சியின் கீழ் இருக்கின்றது.

1846 இல் அப்போதிருந்த அரசியினால் அப்போது நாட்டில் ஆதிகாரம் செலுத்திவந்த சாங் பகதூர் என்ற தளபதியை பதவி கவிழ்க்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதன் போது அரசருக்கு சார்பானவர்களுக்கும் பகதூருக்கு சார்பானவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் பகதூர் வெற்றிப் பெற்று தன்னை பிரதமராக்கி கொண்டு அரசரின் அதிகாரங்களை தன்கையில் எடுத்துக் கொண்டார். மேலும் இவர் ரனா என்ற வம்சத்துக்கும் வித்திட்டார். இவ்வம்சம் இன்றுவரையும் நேபளத்தில் அரசியல் அதிகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரனா வம்சத்தார் பிரித்தானிய ஆதரவு கொள்கையை கடைப்பிடித்தனர். 1923 இல் ஐக்கிய இராச்சியத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது, இதன் மூலம் ஐ.இ. நேபளத்தை சுதந்திர நாடாக ஏற்றுக் கொண்டது.

1940களின் இறுதியில் சனநாயக இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் ரனா அதிகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதேவேலை 1950இல் சீனா திபேத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது, இதன் காரணமாக நேபாளத்தின் அரசியலில் இந்தியா ஆர்வம் கொண்டது. இதன் போது இந்தியா திரிபுவான் என்பவரை அரசராக்குவதற்கு ஆதரவளித்து புதிய அரசையும் அமைத்தது. பல வருடங்களாக அரசுக்கும் அரசருக்கும் ஏற்பட்ட அதிகார பிரச்சினைகளின் பிறகு, 1959 இல் அரசை பதவி விழக்கினார், கட்சியற்ற முறையொன்று ஏற்படுத்தப்பட்டது. 1989 இல் ஏற்பட்ட மக்கள் போராட்டங்கள் காரணமாக அரசர், 1991 மேயில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி பல கட்சி முறைய ஏற்படுத்தினார். முதலாவது சனநாயக தேர்தலில் நேபாள காங்கிரசு வெற்றிப் பெற்று கிரிசா பிரசாத் கொய்ராலா பிரதமராக பதவியேற்றார்.

அண்மைய நிகழ்வுகள்[தொகு]

நேபாள வரைபடம்

2001 யூன் 1 இல் முடிக்குறிய இளவரசன் தீபேந்திரா அரன்மனையில் தனது பெற்றோருடன் தனது மணப்பெண் தொடர்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக கொலைவெறியாடியதில் அவரது பெற்றோர் கொல்லப்பட்டனர் மேலும் மூன்று நாட்களில் அவரும் இறந்தார். பின்னர் பிரேந்திராவின் சகோதரனான கயனேந்திரா மன்னராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையற்ற அரசுகளை பயன்படுத்திக் கொண்ட மாவோயிசவாதிகள் 2004 ஆகஸ்டில் காட்மாண்டூ பள்ளத்தாக்கை கைப்பற்றினார்கள், இதனால் மக்களிடையே மன்னராட்சி மீதான நல்லெண்ணம் குன்றியது.


2005 பிப்ரவரி 1 இல்,மாவோயிச போராளிகளை அடக்குதல் என்ற பெயரால், கயனேந்திரா மன்னர் அரசை பதவி விழக்கிவிட்டு முழு ஆட்சி அதிகாரத்தையும் தன் கையில் எடுத்தார். செப்டெம்பர் 2005 இல் மாவோயிச போராளிகள் மூன்று மாத ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தமொன்றை அறிவித்த போதும் அரசு போர் மூலமாக போராளிகளை அடக்குவதாக பிடிவாதமாக இருந்தது. சில வாரங்களில் 2007 இல் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அரசு அறிவித்தது.

அதற்குப்பிறகு மாவோயிசவாதிகளின் ஆதரவுடன் ஏழு பாராளுமன்ற கட்சிகள் அரசரின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவுக்கும் வகையில் பாரிய எதிர்ப்பார்பாட்டங்களை நடத்தின. எவ்வாறாயினும் இவ்வார்ப்பாட்டங்களை பல பொய் காரணங்களை காட்டி மன்னர் அடக்கினார். வேலையின்மை பாதுகாப்பின்மை போன்றவற்றால் வெறுப்படைந்த மக்கள் மென்மேலும் இவ்வார்ப்பாட்டங்களில் இணைந்தனர். ஆனால் அரசரோ மேலும் மூர்க்கத்தனமாக இவ்வார்ப்பாட்டங்களை அடக்கினார். உணவு பற்றாக்குறையும் நாட்டில் ஏற்படத்தொடங்கியது இதனால் மக்கள் அரண்மனையைச் சூழ்ந்து ஆர்பாட்டம் செய்ய திட்டமிட்டனர். இதன் போது பாதுகாப்புப் படைகள் மேலும் கொடூரமாக செயல் பட தொடங்கினார்கள். விளைவாக 21 பேர் இறந்ததோடு மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயப்பட்டனர்.

2004 ஏப்ரலில் காட்மாண்டூவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

அதிகரித்துவந்த வெளிநாட்டு அழுத்தங்களின் முன்னிலையில் கயனேந்திரா மன்னர் ஏப்ரல் 21 2006 இல் தான் தனது அதிகாரங்களை கைவிடுவதாகவும் அது மக்களுக்கே மீண்டும் வழங்கப்படுவதாகவும் அறிவித்தார். மன்னர் 7 கட்சி கூட்டணியிடம் ஒரு தற்காலிக பிரதமரை நியமிக்குமாறும் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் எனவும் அறிவித்தார். இருப்பினும் பலர் தொடர்ந்து ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு மன்னராட்சி முற்றாக இல்லாதொழிக்கப் படவேண்டும் எனக் கோரினார்கள். கடைசியாக 19 நாள் ஆர்பாட்டங்களுக்குப் பிறகு ஏப்ரல் 24 மத்திய இரவில் ஏப்ரல் 28 ஆம் நாள் பாராளுமன்றத்தை கூடும் படி கேட்டுக் கொண்டார்.

இதன்படி ஒன்றுகூடிய பாராளுமன்றம் அரசரின் இராணுவம் மீதான அதிகாரங்களை அகற்றி மன்னர் இந்து கடவுளின் வாரிசு என்ற பட்டத்தையும் நீக்கியது மேலும் மன்னர் வரிச் செலுத்தவேண்டும் எனவும் கேட்கப்பட்டது. பல அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. "மேதகு மன்னரின் அரசு" என்ற பெயர் நீக்கப்பட்டு நேபாள அரசு என அரசின் பெயர் மாற்றப்பட்டது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தை ஆக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டவாக்க சபையொன்றுக்கான தேர்தல்கள் விரைவில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

கயனேந்திரா மன்னர் தனது அதிகாரங்களை கைவிட்டதையடுத்து நேபாள அரசு மாவோயிசவாதிகளும் போர் நிறுத்தமொன்றுக்கு இணங்கியுள்ளனர். 2006 ஆகஸ்டில் இரு தரப்பினரும் ஆயுத கொள்வனவு தொடர்பில் ஒப்பந்தொமொன்றை கைச்சாத்திட்டனர், இதன் படி ஐக்கிய நாடுகள் சபையானது கண்காணிப்பாளராக செயற்படுகிறது. அரசும் மாவோயிசவாதிகளும் முடியாட்சி தொடர்பில் கடைசி முடிவொன்றுக்கு இன்னம் வரவில்லை.

புவியியல்[தொகு]

நேபாள தரைத்தோற்றப் படம்

நேபாளம் 650 கிமீ நீளமும் 200 கிமீ அகலமும் கொண்ட அண்ணளவான ஒரு செவ்வக வடிவையுடைய நாடாகும். நேபாளம் பொதுவாக மூன்று தரைத்தோற்ற பிரிவுகளாக பிரித்து நோக்கப்படுகிறது: மலைப்பிரதேசம், குன்றுப் பிரதேசம் மற்றும் டெராய் பிரதேசம். இவ்வலயங்கள் கிழக்கு மேற்காக நீண்டு காணப்படுகின்றன. இவை நேபாளத்தின் ஆற்றுத்தொகுதியால் ஊடறுத்து செல்லப்படுகிறது.

இந்திய எல்லையில் காணப்படும் டெராய் சமவெளிகள் இந்திய-கங்கை சமவெளியின் வட பகுதியாகும். இப்பிரதேசம் மூன்று முதன்மையான ஆறுகளால் வளமாக்கப்படுகின்றது அவையாவன: கோசி, நாராயனி, கர்னாலி என்பனவாகும். இப்பிரதேசம் வெப்பமான ஈரப்பதன் கூடிய காலநிலையைக் கொண்டுள்ளது.

குன்றுப் பிரதேசத்தில் 1000 தொடக்கம் 4000 மீட்டர் வரையான நிலப்பகுதி அடங்கும். இங்கு, சிவாலிக், மகாபாரத் லெக் என்ற இரண்டு தாழ் மலைத்தொடர்கள் முக்கியமாக காணப்படுகின்றது. இப்பிரதேசம் நாட்டின் வளமான மற்றும் கூடுதலாக நகரமயமாக்கப்பட்ட காட்மாண்டூ பள்ளத்தாக்கையும் உள்ளடக்குகிறது. இப்பிரதேசம் புவியல் தன்மைக்காரணமாக தனிமைப் படுத்தப்பட்டிருந்தாலும் நாட்டின் பொருளாதார அரசியல் மையமாக விளங்கி வந்துள்ளது. இங்கு 2500 மீட்டருக்கு மேற்பட்ட பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புகள் அரிதாகவே காணப்படுகின்றது.

காளி கண்டகி பள்ளத்தாக்கு

மலைப் பிரதேசமானது உலகிலேயே உயரமான மலைகளைக் கொண்டுள்ளது. உலகில் உயரமான மலையான எவரெஸ்ட் திபெத்துடனான எல்லையில் காணப்படுகிறது. மேலும் உலகின் முதல் பத்து உயரமான மலைகளில் எட்டு நேபாளத்தில் அமைந்துள்ளது. உலகில் மூன்றாவது உயரமான மலையான கஞ்சன்சுங்கா மலை கிழக்கு சிக்கிமுடனான எல்லையில் அமைந்துள்ளது. காடழிப்பு இப்பிரதேசத்தில் காணப்படும் முக்கிய பிரச்சினையாகும்.

நேபாளம் ஐந்து காலநிலை வலயங்களைக் கொண்டுள்ளது. 1200 மீட்டருக்கு கீழான பகுதிகளில் வெப்ப வலய காலநிலையும் 1200 தொடக்கம் 2400 மீட்டர் வரையான பிரதேசம் மிதமான காலநிலையையும் 2400 தொடக்கம் 3600 மீட்டர் வரையான பிரதேசம் குளிர் வலய காலநிலையையும் 3600 தொடக்கம் 4400 மீட்டர் வரையான பிதேசம் உப ஆர்டிக் காலநிலையையும் 4400 மீட்டருக்கு மேலான பிரதேசம் ஆர்டிக் காலநிலையையும் கொண்டுள்ளது. மேலும் நேபாளத்தில், கோடை, பருவக்காற்றுகள், இலையுதிர்காலம், மாரி, இளவேனில் என ஐந்து பருவங்கள் காணப்படுகின்றன. இமாலயம் பருவக்காற்றுகள் செல்லும் வட எல்லையையாகவும் மாரியில் மத்திய ஆசியாவில் இருந்துவரும் குளிர்காற்றுகள் செல்லும் தெற்கு எல்லையாகவும் செயற்படுகின்றது.

நேபாளமும் வங்காளதேசமும் சுமார் 21 கிமீ மட்டுமே அகலமான இந்தியாவுக்குச் சொந்தமான நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரதேசம் சில்லிகுரி வழிப்பிரதேசம் என அழைக்கப்படுகிறது.

பொருளாதாரம்[தொகு]

நேபாளம் உலகில் மிக ஏழையானதும் அபிவிருத்தி குன்றியதுமான நாடுகளில் ஒன்றாகும். மக்கள் தொகையில் 38 சதவீதமானோர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள்.[1] அதன் மூலதனச் சந்தை ஆரம்ப நிலையில் காணப்படுகிறது.[2] மேலும் மிக அண்மையிலேயே பங்குச் சந்தை தகவல்கள் இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளன [3]

நிலநடுக்கம்[தொகு]

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி காலை ஏற்பட்ட நில நடுக்கத்தில் 7,250 [4] பேர் பலியானார்கள். இதன் அதிர்வு ரிக்டர் அளவில் 7.9 பதிவாகியுள்ளது. [5]

ஆதாரங்கள்[தொகு]

  1. நேபாள நுண்-பொருளாதாரம்
  2. நேபாள பங்குச் சந்தை
  3. நேபாள பங்குச்சந்தை
  4. பலி எண்ணிக்கை 7,250 ஆக உயர்வு: 9-வது நாளாக நில அதிர்வு தொடர்கிறது தி இந்து தமிழ் 03. மே 2015
  5. பலி 10,000-ஐ எட்டும் அபாயம்: பெருந்துயரை விவரித்த நேபாள பிரதமர் உருக்கம்இந்து தமிழ் 28 ஏப்ரல் 2015

இவற்றையும் பார்வையிடுக[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

நேபாளம் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

Wiktionary-logo-en.png விக்சனரி விக்சனரி
Wikibooks-logo.svg நூல்கள் விக்கிநூல்
Wikiquote-logo.svg மேற்கோள் விக்கிமேற்கோள்
Wikisource-logo.svg மூலங்கள் விக்கிமூலம்
Commons-logo.svg விக்கிபொது
Wikinews-logo.png செய்திகள் விக்கிசெய்தி


"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாளம்&oldid=1911847" இருந்து மீள்விக்கப்பட்டது