புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது பற்றி பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு நாளை மறுதினம் முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் இப்போது மத்திய அரசிடம் உள்ளது. இதை எண்ணெய் நிறுவனங்களிடமே விட்டு விடும்படி கீர்த்தி பரிக் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும், பெட்ரோலியப் பொருட்களை மானிய விலையில் விற்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க, சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலையை உயர்த்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது. சர்வதேச சந்தையில் இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் விலையை குறைந்த அளவு உயர்த்தினாலே போதும் என்ற நிலை உள்ளது. விலையை உயர்த்துவது பற்றி மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு நாளை மறுதினம் டெல்லியில் கூடி முடிவு செய்ய உள்ளது.