வன்னியின் மூத்த கலைஞரும் படைப்பாளியுமான அரியாம்பொய்கை செல்லத்துரை காலமானார். வன்னியின் தொன்மையையும் வரலாற்றையும் வெளிப்படுத்த வல்ல நடமாடும் ஆவணமாக அரியாம்பொய்கை செல்லத்துரை திகழ்ந்தார்.
நெடுங்கேணி அரியாமடு என்னும் சிறு கிராமத்தில் பிறந்த செல்லத்துரை முல்லைத்தீவு மாவட்டம் தண்ணீருற்று எனும் கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.
வன்னியில் பெண் ஒருவர் மதங் கொண்ட யானையை அடக்கியதாக வரலாறு உள்ளது. குறித்த வரலாற்றினை நூலுருவில் கொண்டுவருவதில் பெரும்பங்காற்றிய அதேவேளை வன்னியின் நாட்டார் இலக்கியங்களை அச்சுவடிவிற்கு கொண்டுவருவதிலும் அவர் குறிப்பிடத்தக்க அளவு பங்கு வகித்திருந்தார். ஆனையை அடக்கிய அரியாத்தை எனும் இலக்கியத்தினை நாடக உருவில் ஆக்கியமையால் கவிகேசன், தமிழ்மணி ஆகிய விருதுகளையும் அவர் பெற்றிருந்தார்.
வன்னியின் தொன்மைகளை வெளிப்படுத்தவல்ல படைப்புக்கள், வாகடங்கள், நாட்டார் இலக்கியங்கள், சிந்துநடைக்கூத்துக்கள் அனைத்தும் ஓலைச்சுவடிகளிலேயே (ஏடுகள்) பாதுகாக்கப்பட்டு வந்தன. குறித்த ஓலைச் சுவடிகளில் குற்றுக்கள், விசிறிகள், அரவுகள் என்பன எழுதப்படுவதில்லை. இருப்பினும் ஓலைச்சுவடிகளை துரிதமாக வாசித்தறியும் திறன்கொண்ட அரியான் பொய்கை செல்லத்துரை மிகவேகமாக எழுத்தாணி மூலம் ஓலைச்சுவடியில் எழுதும் ஆற்றலும் பெற்றவராவார்.
மரபு வழியான வன்னிக்கே சொந்தமான கலைப்படைப்புக்களின் நுணுக்கங்களை நன்கறித்த செல்லத்துரை கடந்த காலங்களில் வன்னியில் மூத்த கலைஞர்கள் கௌரவிக்கப்பட்ட ஒவ்வொரு நிகழ்வுகளிலும் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
}