சென்னை, மார்ச்.1-
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதல்- அமைச்சர் கருணாநிதி சுயமரியாதைக்காரர். இதை எப்போதும் எங்கும் கூறத்தயங்காதவர். அவரது தலைமையில் நடைபெறும் ஆட்சி, தமிழ்நாட்டின் சமதர்ம சகாப்தத்தை சாமானிய மக்கள் பயன்படும் ஒப்பற்ற ஆட்சியாக கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
கருவறை துவங்கி கல்லறை வரை, இந்த ஆட்சியால் பயன் பெறாத மக்களே இல்லை என சொல்லும் மகத்தான ஆட்சி. கூட்டணி என்ற ஒன்றைக் காட்டி, தசரதனிடம் கைகேயி வரம் பெற்றதாக ராமாயண கதையில் வரும் நிகழ்வைப்போல, தோழமை உணர்வு காட்டவேண்டிய சில கட்சிகள், தோள் மேல் சவாரி செய்ய, மிரட்டல் பாணி ஆயுதங்கள் கையில் கிடைத்துவிட்டதுபோல் கற்பனை குதிரைகள் மீது சவாரி செய்வது போன்ற நிபந்தனைகளை ஏற்படுத்தினால், அதற்கு தி.மு.க. இணங்க வேண்டிய, இறங்கி வர வேண்டிய அவசியம் இல்லை.
தி.மு.க. தேர்தல் கால நெருக்கடிகளை சந்திக்கும் கட்சி மட்டும் அல்ல; அரசியல் நெருக்கடி கால நெருப்பாற்றில் நீந்திவந்த ஒரு ஜனநாயக பீனிக்ஸ் பறவை. தமிழ் மக்கள் அதன் பக்கம் உள்ளனர். அதன் தன்னிகரற்ற சாதனைகள் அதன் பலம். அக்கட்சி காட்டும் பண்பாடு, மனிதநேயம், கண்ணியம் அதற்கு பலவீனமாகி விடக்கூடாது.
கட்டுப்பாட்டோடு பட்டி தொட்டியெங்கும் படர்ந்துள்ள பலம் வாய்ந்த இயக்கம் இது. எனவே குட்டக்குட்ட குனியும் போக்குக்கு எங்கே இது ஆட்பட்டுவிடுகிறதோ என்ற அச்சம் தமிழ் இனவுணர்வாளர்களுக்கு, தன்மான தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தேவையற்ற கூடுதல் பாரத்தை இறக்கிவிட்டு, அதன்மூலம் நிரந்தர சுமை தாங்கியாக ஆகாமல், சுயமரியாதையுடன் முடிவு எடுக்க வேண்டும். நட்பு பேசிக்கொண்டே கசப்பும், வெறுப்பும் மேலோங்கும் இரட்டை நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு களத்தில் இறங்குவது யாருக்கும் நல்லதல்ல- கூட்டணி அரசியலில்.
நான் உமி கொண்டு வருவேன்; நீ நெல் கொண்டு வா, குத்தியபின் ஊதி ஊதிதின்போம் என்ற போக்கு நியாயமாகுமா?. 1980&ல் இப்படி விட்டுக்கொடுத்து கெட்டுப்போன பழைய வரலாறு மீண்டும் திரும்ப வேண்டாம். அதற்குமுன் 1971-ல் செய்யப்பட்ட கோயபெல்ஸ் பிரச்சாரத்தின் கொடுமையையே சந்தித்து, வெற்றி வாகை சூடிய இயக்கம் தி.மு.க. எனவே தி.மு.க. சுதந்திரமாக முடிவு எடுக்க வேண்டும்.
பல பழிகளை கடந்த காலத்தில் அது சுமந்த கறை நீங்கும். வெற்றிச் சூரியன் விரிகதிர் வெளிச்சத்துடன் கிளம்பும் என்பதே தாய்க் கழகத்தின் கணிப்பு, வேண்டுகோள். உலகத்தமிழர்கள்- உண்மைத்தமிழர்களின் உணர்வும் அதுதான்.
இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.