நாகூர் வாடா சமையல் குறிப்பு - படங்களுடன் - 24613 | அறுசுவை


நாகூர் வாடா

வழங்கியவர் : halilafarveen
தேதி : திங்கள், 17/12/2012 - 11:12
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
4.166665
6 votes
Your rating: None

 

  • பச்சரிசி - 2 கப்
  • ரவை - அரை கப்
  • சோடா உப்பு - அரை தேக்கரண்டி
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் (பெரியது) - 2
  • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • ஆற்று இறால் - 50 கிராம்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு

 

அரிசியை 6 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து விட்டு, தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் ரவை போல் அரைக்கவும். (முன்பெல்லாம் உரலில் இடிப்பார்கள்). ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்த மாவிலிருந்து அரை கப் எடுத்து அதில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கஞ்சி போல் காய்ச்சி ஆற விடவும். (இதை கப்பி காய்ச்சுவது என்பார்கள்).

கஞ்சி நன்கு ஆறியதும் அதை மீதமுள்ள மாவில் ஊற்றி ரவை, சோடா உப்பு மற்றும் உப்பு சேர்த்து நன்கு ஒன்று சேர கெட்டியாக பிசைந்து, இரவு முழுவதும் வைத்து புளிக்க விடவும். மறுநாள் புளித்து உப்பி இருக்கும்.

இறாலை சுத்தம் செய்து கொள்ளவும் (மேல் தோல் உரிக்க வேண்டாம்). பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி உப்பு போட்டு வாசனை வரும் வரை இறாலை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.

ஒரு ப்ளாஸ்டிக் பை (அ) காட்டன் துணியை வைத்து அதில் சிறு உருண்டை மாவை எடுத்து வட்டமாக தட்டி, அதன் மேல் அரை தேக்கரண்டி அளவு வறுத்த வெங்காயத்தை பரப்பி வைக்கவும்.

அதன் மீது மேலும் மாவை வைத்து வடை போல் தண்ணீரை தொட்டு தட்டவும். தண்ணீர் தொட்டு தட்டினால் ஒட்டாமல் வரும்.

உளுந்து வடை போல் நடுவில் ஓட்டை போட்டு மேலே இறாலை வைத்து பதிக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்துள்ள வாடாவை போட்டு, இருபக்கமும் வேகுமளவு திருப்பிப் போட்டு பொரிக்கவும். பொன்னிறமானதும் எண்ணெயை வடித்து எடுக்கவும்.

சுவையான நாகூர் வாடா தயார். வறுத்த வெங்காயத்துடன் பரிமாறவும். வாடாவில் இறால் மட்டும் வைத்து வெங்காயம் வைக்காமலும் செய்யலாம். இதில் கடல் இறால் வைத்தும் செய்யலாம். கடல் இறாலை விட ஆற்று இறால் வைத்தால் சுவையும், வாசனையும் நன்றாக இருக்கும்.






ஹலீலா

வாடா பார்க்கவே அழகா இருக்கு வாழ்த்துக்கள்.நான் இறால் சாப்பிட்டதும்
இல்லை செய்ததும் இல்லை :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

halila

ஹலி வாடா சூப்பரா செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள்.....

ஹலிலா

அஸ்ஸலாமு அலைக்கும் ஹலிலா
வாவ்....வாடா சூப்பர்ர்ர்ர்ர்ர்............
நான் கேட்டதுமே குறிப்பு அனுப்பியதற்க்கு ரொம்ப நன்றி மா....
இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா செஞ்சு பார்க்க்குறேன்....

ஹலிலா அக்கா

ஹலிலா அக்கா டேஸ்டி வாடா சூப்பரான குரிப்பு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வாடா

இறாலில் மேல் தோல் எடுக்க வேண்டாம்னா?அதன் ஓடோடவா..எப்பவுமே இந்த வாடா மேல் ஒரு கண் இருக்கு செய்தே தீரணும்

அஸ்ஸ்லாமு அலைக்கும் ஹலிலா

அஸ்ஸ்லாமு அலைக்கும் ஹலிலா வாடா சூப்பர்மா நாகூர்க்கே வந்து சாப்பிட்டமாதிரியிக்கு நன்றிம்மா வாழ்த்துக்கள்

ஹலிலா

அஸ்ஸ்லாமு அலைக்கும் ஹலிலா,நான் பிரியானி வாடா தான் செய்வேன்,அவசியம் இதையும் செய்து பார்க்கிரேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

சுவர்ணா

சுவர்ணா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா. இறால் இல்லாமலும் இதை செய்யலாம் நன்றாக இருக்கும்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஹலீலா

ரொம்ப சூப்பரா இருக்குங்க... வாடா இதுவரை செய்ததில்லை.. பார்க்க ஸ்டஃப்டு வடை போல இருக்கு. ஆசை செய்ய... ட்ரை பண்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா