ரத்தப்பாசம் என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் ஸ்ரீதர். அந்த நாட்களில் மிகுந்த புகழ் பெற்றிருந்த இளங்கோவனின் வசனத்தால் ஈர்க்கப்பட்டு திரையுலகை நாடியவர் ஸ்ரீதர். தொடக்கத்தில் அமரதீபம், உத்தம புத்திரன், புனர் ஜன்மம், எதிர்பாராதது போன்ற பல படங்களுக்கு வசனகர்த்தாவாகப் பணி புரிந்து வந்தார்.
ஸ்ரீதர் இயக்கிய முதல் படமான கல்யாணப்பரிசு ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் விஜயகுமாரி ஆகியோரின் நடிப்பில் 1957ஆம் ஆண்டு வெளியானது. வீனஸ் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்திற்காக ஸ்ரீதர் இயக்கிய இத்திரைப்படம், சரோஜாதேவி கதாநாயகியாக முதலில் அறிமுகமான படம் என்பதும், அதுவரை பாடகராக மட்டுமே தமிழில் அறியப்பட்டிருந்த ஏ.எம். ராஜா ஒரு இசை அமைப்பாளராகவும் அறிமுகமான படம் இது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இருவரின் திரைவாழ்க்கையிலுமே இது ஒரு பொன்னான படமாக அமைந்தது.
இத்திரைப்படத்தின் பாடல்களான "காதலிலே தோல்வியுற்றான்" போன்ற பாடல்கள் காலத்தை வென்ற கீதங்களாக விளங்குகின்றன. 1961 ஆம் ஆண்டில் தனது சொந்தப் பட நிறுவனம் சித்ராலயாவைத் தொடங்கிய ஸ்ரீதர் 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினார். இவர் கடைசியாக இயக்கிய படம் தந்துவிட்டேன் என்னை.
சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதர், திரைப்படப் பணிகளிலிருந்து முழுவதுமாக ஒதுங்கியிருந்தார். 2008, அக்டோபர் 20-ல் சென்னையில் தனது 80-வது வயதில் காலமானார்.
அவர் இயக்கிய படங்களில் சில,
1957 கல்யாணப் பரிசு, 1960 விடிவெள்ளி, மீண்ட சொர்க்கம், 1961 தேன் நிலவு, 1962 நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ்காரன் மகள், ஆலயமணி, 1963 நெஞ்சம் மறப்பதில்லை, 1964 காதலிக்க நேரமில்லை, 1965 சுமை தாங்கி, வெண்ணிற ஆடை, 1967 ஊட்டி வரை உறவு, 1968 கலாட்டா கல்யாணம் 1969 சிவந்த மண், 1971 உத்தரவின்றி உள்ளே வா, 1972 அவளுக்கென்று ஒரு மனம், 1974 உரிமைக்குரல், 1978 இளமை ஊஞ்சலாடுகிறது, 1979 அழகே உன்னை ஆராதிக்கிறேன், 1980 சௌந்தர்யமே வருக வருக, 1981 நினைவெல்லாம் நித்யா