11-ம் நாளான இன்று தேரோட்டம் நடந்தது. இதற்காக கீழமாசி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த தேர்களில் பிரியாவிடை யுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் இன்று அதிகாலை எழுந் தருளினர்.
தீபாராதனைக்கு பிறகு 6.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கலெக்டர் வீரராகவராவ் உள்ளிட்ட பிரமுகர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் தேரை இழுக்கத் தொடங்கினர். சுவாமி தேர் புறப்பட்ட சிறிது நேரத்தில் மீனாட்சி அம்மனின் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
கீழமாசி வீதியில் இருந்து புறப்பட்ட சுவாமி, அம்மன் தேர்கள் பக்தர்கள் வெள்ளத்தில் தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி வழியாக மீண்டும் இருப்பிடத்தை அடைகிறது.
மதுரையில் சித்திரை திருவிழா களை கட்டியிருக்கும் நிலையில் பக்தர்களை தேடி வந்து சுவாமியும், அம்மனும் தேர்களில் பவனி வந்து தரிசனம் தரும் காட்சியை மாசி வீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்து வழிபாடு செய்தனர்.
தேர் இழுத்த பக்தர்களின் “ஹரஹர சுந்தரர்... மீனாட்சி சுந்தரர்” என்ற கோஷம் விண்ணை பிளந்தது. தேரோட்டத்தை யொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன. போலீசார் ஆங் காங்கே காமிராக்கள் வைத்து கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர்.
மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நாளை (29-ந் தேதி) தேவேந்திர பூஜையுடன் நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா தொடங்குகிறது. கள்ளழகர் வேடத்தில் சுந்தரராஜப்பெருமாள் இன்று மாலை அழகர் கோவிலில் இருந்து தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பாடாகிறார்.
நாளை கள்ளழகருக்கு மதுரை மூன்று மாவடியில் எதிர்சேவை நடக்கிறது. மறுநாள் (30-ந் தேதி) அதிகாலை கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்குகிறார்.